RSS

கண்ணா! நீயும் நானுமா?


சந்தேகம் என்பது கேள்வி ஞானம் குறைந்தவர்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் என்று ஒருசாரார் விடைகூறுகின்றார்கள். ஆனால் சந்தேகப் படுதல் என்ற சொல் இருவருக்கு இடையில் இருக்கும் புரிந்துணர்வு மறைக்கப்படுதல் என்று உளவியலாளர்கள் கருதுகின்றார்கள். மாணவனுக்கு பாடத்தின்மீது சந்தேகம். ஆசிரியருக்கு மாணவன்மீது சந்தேகம் இந்த இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. சிலர் தங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களை இரகசியமாக வைத்துள்ளார்கள். சிலர் தங்கள் சந்தேகங்களைப் பகிரங்கப்படுத்தி விடைகாண முயல்கின்றார்கள். ஒருவருக்குத் தீர்க்கப்படாமல் இருக்கும் சந்தேகம் ஒன்று வந்துவிட்டால் அவர் வாழ்வின் தன்னப்பிக்கை இழந்தவராகக் கருதப்படும் ஒரு நோயாளியாகவே இந்த உலகத்தில் நடமாடுவார். 

நாம் நம்மைப்பற்றி நிறையவே நம்பிக்கை வைத்திருக்கிறோம். நான் புத்திசாலி என்னால் எதையும் செய்யமுடியும் என்று அகங்காரப்படுகின்றோம். நான் என்ற வெளியில் வீசப்பட்ட இந்த எண்ணங்கள்தான் உலகில் நிறையப் பிரச்சனைகளைக் கொண்டு வருகின்றன. நம்மிடையே இருந்து எழும் இந்த கெட்ட குணம்தான் மற்றவர்களுக்கிடையே பகையை உருவாக்கி பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது. நாம் நமது மேன்மைக்காக மற்றவர்களைப் பயன்படுத்த நினைக்கிறோம். அதனால் நாம் நமது கருத்துக்களை மற்றவர்கள்மீது திணித்துவாழப் பழகிவிட்டோம். இந்தத் தவறான போக்கு இல்லாத ஒருவரைப் பார்ப்போம். 

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட வாழ்வியல் தேடல்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்களே பகவத்கீதை என்ற ஆன்மீக நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது.(நாம் படிப்பதற்குக் கீதை என்னும் பாடம் கொடுத்தான் - கண்ணதாசன்) பகவான் அந்தக் கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான், அர்ஜுனன்; அர்ஜுனன் கொண்ட சந்தேகம் என்ன தெரியுமா ? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாகக் கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதுவே அவனின் அர்சுனனின் பெரும் சந்தேகமாக இருந்தது. எங்களால் போற்றுதலுக்குரிய பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். மிகவும் சிறந்து அறிவு படைத்தவர் அவர். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர் முனையில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம். ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும் ? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார் ? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம் ? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.

அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.  ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது - தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்

அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய்.


இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான். 
எல்லாமே சரியாகப் படுகிறது. அவிட்ட கூந்தலை சிகைக்காய் வைத்துத் தலைமுழுகி  முடியவேண்டும் என்ற சபதத்திற்கு இந்தப்போர் தேவையா என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. why this கொலவெறி. 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: